காளிஸ்தோத்திரம்

காளிஸ்தோத்திரம்

bookmark

யாது மாகி நின்றய் - காளி! எங்கும் நீநி றைந்தாய், 
தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை. 
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்! 
ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய். 

எந்த நாளும் நின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்; 
கந்தனைப்ப யந்தாய் - தாயே! கருணை வெள்ளமானாய் 
மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில் 
சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே! 

கர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம், 
தர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி, 
மர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம், 
செம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும். 

என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும், 
குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும், 
நன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும், 
ஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா. 

வான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி, 
யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன், 
ஞான மொத்த தம்மா! - உவமை நானு ரைகொ ணாதாம். 
வான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ? 

ஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே 
தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்? 
வாயி னிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை 
நேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும். 

காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும், 
வேளை யொத்த விறலும் - பாரில் - வெந்த ரேத்து புகழும், 
யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும், 
வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே!