சிவசக்தி

சிவசக்தி

bookmark


இயற்கை யென்றுரைப்பார் - சிலர் 
  இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார், 
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த் 
  தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர், 
வியப்புறு தாய்நினக்கே - இங்கு 
  வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும் 
நயப்படு மதுவுண்டே? - சிவ 
  நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய். 

அன்புறு சோதியென்பார் - சிலர் 
  ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார், 
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர் 
  எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார், 
புன்பலி கொண்டுவந்தோம் - அருள் 
  பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் 
மின்படு சிவசக்தி - எங்கள் 
  வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 

உண்மையில் அமுதாவாய் - புண்கள் 
  ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய், 
வண்மைகொள் உயிர்ச்சுடராய் - இங்கு 
  வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய், 
ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும் 
  ஊறிடுந் திருவருட் சுனையாவாய் 
அண்மையில் என்றும் நின்றே - எம்மை 
  ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய். 

தெளிவுறும் அறிவினை நாம் - கொண்டு 
  சேர்த்தனம், நினக்கது சோமரசம், 
ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை 
  ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம், 
களியுறக் குடித்திடுவாய் - நின்றன் 
  களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம், 
குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர் 
  குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம். 

அச்சமும் துயரும் என்றே - இரண்டு 
  அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார், 
துச்சமிங் கிவர்படைகள் - பல 
  தொல்லைகள் கவலைகள் சாவுகளாம், 
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள் 
  இன்னமு தைக்கவர்ந் தேகிடவே, 
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு 
  பெருநகர் உடலெனும் பெயரினதாம். 

கோடிமண் டபந்திகழும் - திறற் 
  கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும் 
நாடிநின் றிடர்புரிவார் - உயிர் 
  நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார், 
சாடுபல் குண்டுகளால் - ஒளி 
  சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார் 
பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள் 
  பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய். 

நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள் 
  நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே, 
பொன்னவிர் கோயில்களும் - எங்கள் 
  பொற்புடை மாதரும் மதலையரும், 
அன்னநல் லணிவயல்கள் - எங்கள் 
  ஆடுகள் மாடுகள் குதிரைகளும், 
இன்னவை காத்திடவே - அன்னை 
  இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம். 

எம்முயி ராசைகளும் - எங்கள் 
  இசைகளும் செயல்களும் துணிவுகளும் 
செம்மையுற் றிடஅருள்வாய் - நின்றன் 
  சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம். 
மும்மையின் உடைமைகளும் - திரு 
  முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம், 
அம்மைநற் சிவசக்தி - எமை 
  அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்.