மஹாகாளியின்புகழ்

மஹாகாளியின்புகழ்

bookmark

காவடிச் சிந்துராகம் - ஆனந்த பைரவி தாளம் - ஆதி 

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது 
காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங் 
காரமிட் டுலவுமொரு வண்டு - தழல் 
காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும் 
கால்களா றுடைய தெனக் கண்டு - மறை 
காணுமுனி வோருரைத்தார் பண்டு. 
மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி 
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த 
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் - பழ 
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த 
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக 
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம். 

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள் 
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை 
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள் 
ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன் 
அறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள் 
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை. 
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள் 
இஃதெலா மவள்புரியும் மாயை - அவள் 
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில் 
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம் 
எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து 
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் - பேயை. 

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான் 
அங்குமிங்கு மெங்குமுள வாகும் - ஒன்றே 
யாகினா லுலகனைத்தும் சாகும் - அவை 
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை 
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த 
அறிவு தான் பரமஞான மாகும். 
நீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடி துய்ப்பர் 
நீண்டகாலம் வாழ்வர் தரைமீது - எந்த 
நெறியுமெய்து வர்நினைத்த போது - அந்த 
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத 
நீழலடைந் தார்ர்கில்லையோர் தீது - என்று 
நேர்மைவேதம் சொல்லும் வழியிது.