மஹாசக்திவெண்பா

மஹாசக்திவெண்பா

bookmark

தன்னை மறந்து சகல உலகினையும் 
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி - அன்னை 
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம் 
துவளா திருத்தல் சுகம். 

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி, 
அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை, - தஞ்சமென்றே 
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை 
ஐயமறப் பற்றல் அறிவு. 

வையகத்துக் கில்லை! மனமே! நினைக்குநலஞ் 
செய்யக் கருதியிவை செப்புவேன் - பொய்யில்லை 
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற 
சொல்லால் அழியும் துயர். 

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் 
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர் 
சக்தியே நம்மை சமைத்ததுகாண், நூறாண்டு 
பக்தியுடன் வாழும் படிக்கு.