வையம்முழுதும்

வையம்முழுதும்

bookmark

வையம் முழுதும் படைத்தளிக் கின்ற 
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம், 
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி 
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே. 

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற் 
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம், 
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை 
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே. 

வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை 
மேவிடும் சக்தியை மேவு கின்றோம், 
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை 
யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே. 

உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந் 
தோங்கிடும் சக்தியை ஓது கின்றோம், 
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப் 
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே. 

சித்தத்தி லே நின்று சேர்வ துணரும் 
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம், 
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் 
எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே. 

மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ் 
வையமிசை நித்தம் பாடு கின்றோம், 
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர் 
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே. 

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி 
ஓம்சக்தி என்றுரை செய்திடு வோம், 
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர் 
ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார்.