மிதிலைக் காட்சிப் படலம் - 646
மூவரும் சனகன் எதிர்கொளச்சென்று தங்குதல்
விசுவாமித்திரர் முதலிய மூவரும் சனகன் எதிர்கொள்ளச் சென்று
மாளிகையில் தங்குதல்
646.
ஏகி. மன்னனைக் கண்டு. எதிர் கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட.
போக பூமியில் பொன்னகர் அன்னது ஓர்
மாக மாடத்து. அனைவரும் வைகினார்.
அனைவரும் - (விசுவாமித்திரன் முதலிய) அம்மூவரும்; ஏகி -
அரசனது அரண்மனைக்குள் சென்று; மன்னனை - சனகராசனை;
கண்டு - பார்த்து; அவன் - அவ்வரசன்; ஓகையோடும்
- மகிழ்ச்சியுடன்; எதிர்கொண்டு - எதிரில் வந்து உபசரித்து; இனிது
- இனிமையாக; கொண்டு - அழைத்துக்கொண்டு போய்; போக
பூமியில் - (அதன்பின்) இன்ப பூமியான; பொன் நகர்
அன்னது - அமராவதியில் உள்ள ஆடக மாடம் போலச் சிறந்த;
ஓர் மாக மாடத்து - ஒரு வான் அளாவிய மாளிகையில்;
உய்த்திட -சேர்ப்பிக்க; வைகினார் - (அங்கே) தங்கினார்கள்.
பொன்னகர் - பொன்மயமான மாளிகை; ஆடகமாடம் என்பர். 83
