வள்ளிப்பாட்டு - 1

வள்ளிப்பாட்டு - 1

bookmark

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ 
குறவள்ளீ, சிறு கள்ளி! 

சரணங்கள் 

(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி 
  யோரத்தி லேயுனைக் கூடி -நின்றன் 
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம் 
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி - குழல் 
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை 
  யோரத்திலே அன்பு சூடி - நெஞ்சம் 
ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன் 
  பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்) 

வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி 
  விரிந்து மொழிவது கண்டாய் - ஒளிக் 
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக் 
  குறிப்பிணி லேயொன்று பட்டு - நின்றன் 
பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம் 
  பின்ன மறச் செல்லவிட்டு - அடி 
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! . நினைச் 
  சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்) 

வட்டங்க ளிட்டுங் குளமக லாத 
  மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல - நினை 
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின் 
  மேனி தனைவிட லின்றி - அடி 
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை 
  இரவியைப் போன்ற முகத்தாய்! - முத்தம் 
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம் 
  இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)